×

நடைபயிற்சி சென்ற பெண் மீது முட்டை வீசி 7 சவரன் செயின் பறிப்பு

தாம்பரம், பிப்.21: தாம்பரம் அருகே நடைபயிற்சி சென்ற பெண் மீது முட்டையை வீசி, அவரது கழுத்தில் கிடந்த 7 சவரன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், சுதர்சன் நகர், 7வது தெருவில் வசித்து வருபவர் கவிதா (58). இவர், நேற்று காலை வழக்கம் போல் கருமாரியம்மன் கோயில் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது தனியாக நடந்து சென்ற கவிதாவை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் சென்றபடி கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். இதனால் பதறிபோன கவிதா நிலை தடுமாறியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் கவிதா அசந்த நேரத்தில் அவர் கழுத்தில் கிடந்த 7 சவரன் தங்க சங்கிலியை அறுக்க முயற்சித்துள்ளார். அப்போது கவிதா தாலி சங்கிலியை இறுக்கி பிடித்ததால் அவரை கீழே தள்ளிவிட்டு தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார், தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், போலீசார் சிசிடிவி கேமரா பொருத்தி குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பால் குடித்துவிட்டு உறங்கியபோது...