×

17 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற ஆணை

கிருஷ்ணகிரி, பிப்.21: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுதவற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 319 மனுக்களை பெற்றார். அந்த மனுக்களை உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர், போச்சம்பள்ளி வட்டத்தை சார்ந்த 6 பயனாளிகளுக்கு, இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், 4 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியம், ஒரு பயனாளிக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை என மொத்தம் 17 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். முன்னதாக, ஊரக வாழ்வாதாரம் மற்றும் மகளிர் திட்டம் மூலம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு விற்பனை கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயினி, போச்சம்பள்ளி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கங்கை, உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) பிரபாகர், யோகலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்