வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

அரூர், பிப்.21: பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், அரூர் வரட்டாறு அணையில் இருந்து, கலெக்டர் சாந்தி பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து 40 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு அணையில் இருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு, தொடர்ந்து 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீரும், புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள நேரடி பாசனத்திற்கு, 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீர் என மொத்தம் 40 நாட்களுக்கு, 5,108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 103.68 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, சாமநத்தம் புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாதியானூர், கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஆகிய 15 கிராமங்கள் பயன்பெரும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரபு, தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் மாலினி, கீரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, தொடர்பு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: