×

முத்துப்பேட்டை 13வது வார்டில் கோரையாற்றில் படித்துறை கட்டித்தர வேண்டும்

முத்துப்பேட்டை, பிப்.21: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 13வது வார்டு மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் திடல் அருகே கோரையாறு செல்கிறது. இந்த இடத்தில் சிமெண்ட் கட்டுமானத்தால் ஆன பெரியளவில் குளிக்கும் படித்துறை ஒன்று இருந்தது.
இந்த படித்துறை இப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி சுற்று பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு குளிக்கவும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் பயனாக இருந்து வந்தன. அதேபோல் இதன் அருகாமையில் பெரியகடை தெரு மீன் மார்க்கெட் உள்ளதால் கடலிலிருந்து, மீன் பிடித்துக்கொண்டு இந்த கோரையாறு வழியாக படகில் வரும் மீனவர்கள் மீன் மார்க்கெட்டுக்கு செல்ல இந்த கோரையாறு படித்துறையைதான் பயன்படுத்தி வந்தனர். பின்னர் நாளடைவில் இப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதால் கோரையாறு தூர்ந்து போய் இப்பகுதியில் இருந்த படித்துறை மண் மூடி படித்துறை இல்லாதளவில் மாறியது. இதனால் மக்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்த்தால் அப்பகுதி சுகாதாரமற்ற நிலைக்கு போனது.  தற்போது ஆற்றில் பல அடிதூரம் தூர்ந்து போய் இப்பகுதி மக்களுக்கு மீனவர்களும் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. இதனால் சுற்று பகுதி மக்கள் நெடுந்தூரம் சென்று வேறு பகுதியில் உள்ள கோரையாற்றை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முனைப்புக்காட்டி உடன் இப்பகுதி மக்கள் நலன் கருதியும், இப்பகுதி மீனவர்கள் நலன் கருதியும் இப்பகுதியில் உள்ள கரையில் பெரியளவில் தளம் அமைத்து ஆற்றின் நீர் ஓட்டத்தில் படித்துறையும் கட்டி தர வேண்டும் என இப்பகுதி மக்களும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupet Ward 13 ,Paditurai ,Koriyar ,
× RELATED ஜெயலலிதாவை இழிவாக பேசியவரின்...