தூத்துக்குடி, பிப். 21: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வல்லநாடு விவசாய உழவர் ஆர்வலர் குழு தலைவர் தம்பான், செயலாளர் நங்கமுத்து தலைமையில் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், தம்பான் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: வல்லநாடு மற்றும் வல்லநாட்டை சுற்றியுள்ள கலியாவூர், சிங்கத்தாகுறிச்சி, காரசேரி, எல்லநாயக்கன்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துக்களில் நெல் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வல்லநாட்டில் தற்காலிகமான நெல் கொள்முதல் நிலையத்திற்கு பதிலாக நிரந்தரமான நெல் கொள்முதல் அமைத்து கொடுத்திட வேண்டும். இதேபோல் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு: விளாத்திக்குளம், குளத்தூர், எட்டயபுரம், படர்ந்தபுளி, கடம்பூர், கழுகுமலை, குருமலை உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.