திண்டுக்கல், பிப். 21: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நல்லுற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘‘தமிழ்நாட்டில் வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் நல்லுறவு நிலைமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு விருது திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிகாக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2017, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருது பெற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பத்தினை தொழிலாளர் துறை //labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், திண்டுக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிடையாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வருகிற பிப்.28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.