காஞ்சிபுரம். அக். 1: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தின் 2022ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், இந்த ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும்,
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையினையும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளுக்கு அவர்களது உடல் நலம் பேணும் வகையில் சத்தான பழ வகைகள் வழங்கப்பட்டது. மேலும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவ காப்பீடு துறை அலுவலர்ககளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மருத்துவ காப்பீடு துறை அலுலவர்கள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.