×

ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காய்கறி வியாபாரி அதிரடி கைது: பொன்னேரி போலீஸ் நடவடிக்கை


பொன்னேரி, அக். 1:  ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  வாலிபர் மீஞ்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆவடி  கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்றுமுன்தினம் எண் 100க்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்ணை பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனுப்பம்பட்டு பகுதியில் செல்போன் சிக்னல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அனுப்பம்பட்டு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த ருக்குமாங்கதன் என்பவரின் மகன் லோகேஷ் (எ)விக்னேஷ் (36) என தெரிய வந்தது.

இவர், பி. ஏ பட்டதாரி, மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருபவர்.  இதனை அடுத்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று,  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடி குண்டு வைத்திருப்பதாக  மிரட்டல் வந்தது. எனவே, இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அப்பள்ளியில் படிக்கும் மாணவனே வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்தது. இதேபோல தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் மேலும், இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags : Aavadi Commissioner ,Ponneri ,
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்