திருக்காட்டுப்பள்ளி, அக். 1: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சௌந்தரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இங்கு கடந்த 39 ஆண்டுகளாக நவராத்ரியை முன்னிட்டு உலக அமைதி மற்றும் காவிரியில் நீர் பெருகி விவசாயம் செழித்திட வேண்டி சௌந்தரநாயகி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. 40வது ஆண்டு விழா கடந்த 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகளும், தொடர்ந்து அம்மனுக்கு லட்சார்ச்சனையும் நடந்து வருகிறது. மாலை வசந்த மண்டபத்தில் கொலு அமைக்கப்பட்டு, ஊஞ்சலில் அம்மன் (உற்சவர்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். 4ம் நாள் விழாவில் சௌந்தரநாயகி அம்மனுக்கு தட்சிணாமூரத்தி அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. நிறைவு விழாவாக 7ம் தேதி சௌந்தரநாயகி அம்பாளுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.