×

நாகப்பட்டினம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

நாகப்பட்டினம், அக். 1: நாகப்பட்டினம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூறினார். நாகப்பட்டினம் நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: கவிதா: நாகப்பட்டினம் நகர எல்லையில் குடிநீர் விநியோகம் செய்யும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும். அதுவரை லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவி(ஆணையர்): கீழ்வேளூர் அருகே ஓடாச்சேரி என்னும் இடத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடியும் வரை நாகப்பட்டினம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
பரணிகுமார்: மழைகாலம் தொடங்குவதற்குள் நாகப்பட்டினம் நகராட்சியில் வடிகால்களை தூர் வார வேண்டும்.
மாரிமுத்து(தலைவர்): நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் மழை நீர் தேங்கும் இடங்கள் குறித்து முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த இடங்கள் கண்டறிந்து மழை காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது சுகாதாரப்பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியின் கீழ் நாகப்பட்டினம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலா: குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதற்கு காரணம் நகராட்சியில் பணிகள் செய்யும் பணியாளர்கள் சரியாக பணிகளை முடிப்பது இல்லை. எனவே எந்த பணியை எடுத்து கொண்டாலும் சரியான முறையில் முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஜெயகிருஷ்ணன்(பொறியாளர்): ஏற்கனவே பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது.
முகம்மதுநத்தர்: பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவார்கள் என அறிந்து அவர்களின் பசியை போக்க காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
முகம்மதுஷேக்தாவூது: கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் வீட்டின் உரிமையாளர்கள் கட்டிட பொருட்களை சாலைகளில் கொட்டி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். மழை காலங்களில் மணல் தண்ணீரில் கரைந்து வடிகாலில் சென்று அடைத்து கொள்கிறது. இதை தூர்வாருவதற்கு முடியாத காரணத்தால் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே கட்டுமான பொருட்களை சாலைகளில் கொட்டுவதற்கு தீர்வு காண வேண்டும்.
ஆசிக்அகமது: சாலைகளில் கால்நடைகள் சுற்றிதிரிவதால் வாகனங்களில் செல்வோர்கள் விபத்துக்குள் ஆகின்றனர். சில நேரங்களில் வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறந்து சாலைகளில் கிடக்கிறது. இதை அகற்ற வேண்டியது கடினமாக உள்ளது. எனவே சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர்:சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டியது வருவாய்த்துறையின் பொறுப்பு. மேலும் நாகப்பட்டினத்தில் கோசாலை இல்லை.
முகுந்தன்: நகராட்சிக்கு சொந்தமான கால்நடை அடைக்கும் பட்டி தனியார் வசம் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் மீண்டும் பட்டி அமைத்து சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை அடைக்க ஏற்பாடு செய்யலாம்.
ஆணையர்: அந்த இடம் கோர்ட் விசாரணையில் உள்ளது. வழக்கு முடிந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆசிக்அகமது: பல ஆண்டு காலமாக வழக்கு நடந்து வருகிறது. நகராட்சி வக்கீல் மூலம் வழக்கை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Nagapattinam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்