ஆரணி, அக்.1: ஆரணி நகராட்சியில் உள்ள அறிஞர் அண்ணா மன்ற வளாகத்தில் நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு, பொறியாளர் ராஜவிஜயகாமராஜ், மேலாளர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, நகரமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நகராட்சிக்குட்பட்ட தர்மராஜா கோயில் தெருவில் பக்ககால்வாய் அமைத்தல், பழுதடைந்த சாலை சிரமைத்தல், பள்ளி நகராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மேற்கூரை அமைத்தல், சிமெண்ட் தரை அமைத்தல், கழிவறை கட்டுதல், ஆரணி டவுன் பழைய, புதிய பஸ்நிலையங்களில் உயர்மின் கோபுர மின்விளக்கு, பயணிகள் இருக்கை, குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் மற்றும் பேருந்து கால அட்டவணை பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் என மொத்தம் ₹50 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.