தூத்துக்குடி,அக்.1: தூத்துக்குடி தசரா திருவிழா சப்பர பேரணிக்கான வழித்தடங்களை சீரமைத்து தந்திடவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமியிடம் இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நவராத்திரி தசரா திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரிலுள்ள திருக்கோவில் அம்பாள்களின் அருட்சப்பரபேரணி வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது. கடந்த 40ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் வரும் 7ம்தேதி தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் இருந்து அனைத்து திருக்கோவில்களிலும் சப்பரப்பேரணியானது பெண்கள் கலந்துகொள்ளும் மாவிளக்கு ஊர்வலமாக வந்து சிவன்கோவில் முன்பு ரிஷப வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. சப்பர வீதிஉலா தடையின்றி நடைபெறும் வகையில் அவ்வழித்தடங்களிலுள்ள மரங்களின் கிளைகளை அகற்றிடவேண்டும். மாநகராட்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் சிவன்கோயில் பெருமாள் கோயில் இடையேயுள்ள கழிவுநீர் ஓடை பள்ளம் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து சப்பரபேரணி சிறப்பாக நடைபெற வழிவகை செய்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.