×

தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக 4,700 மணல் மூட்டைகள், 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்

நாகப்பட்டினம், செப்.30: தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக 4,700 மணல் மூட்டைகள், 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் கூடுதலான மழை பெய்துள்ளது. வரும் வடகிழக்கு பருவமழையால் இயல்பான மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இக்காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 12 புயல் பாதுகாப்பு மையங்களும், 5 பல்நோக்கு பேரிடர் மையங்களும் ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என உறுதி செய்யப்பட்டுள்ளது. சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், முன் எச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்,பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள் என 5 ஆயிரம் முதல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் 200 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி வகுப்பு முடித்து உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான 4 ஆயிரத்து 700 மணல் மூட்டைகள், 65 ஆயிரம் பாலிதின் பைகள், 20 யூனிட் மணல், சவுக்கு குச்சிகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை, காவல்துறை உபகரணங்கள் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 7.5 மீட்டர் மின் கம்பம் 500, 8 மீட்டர் மின் கம்பம் 2 ஆயிரம், 9மீட்டர் மின் கம்பம் 500, மின்மாற்றிகள் 75 போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 1077 என்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான மரங்கள், கட்டிடங்கள் இருந்தால் அது குறித்த தகவல்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து தீயணைப்பு துறை, காவல்துறை போன்ற துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களையும், துறைவாரியாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் குளத்தில் நடந்த பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் செருதூர் ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் ஆகியவற்றையும் வருவாய் நிர்வாக ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் அருண்தம்புராஜ், எஸ்பி ஜவஹர், டிஆர்ஓ ஷகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் ரமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு