திருவண்ணாமலை, செப்.30: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்தால் மான் பலியானது. திருவண்ணாமலை தீப மலையில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. மலையில் இருந்து மான்கள் கூட்டம் கூட்டமாக மலையடிவார பகுதியில் நடமாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கிரிவலப்பாதையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சாலையை கடக்கும் மான்கள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. அதோடு நாய்கள் விரட்டி கடிப்பதாலும் மான்கள் இறப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிவில் சப்ளை குடோன் அருகே சாலையை கடந்த மானை அப்பகுதியில் இருந்த நாய்கள் விரட்டி சென்று கடித்தது. இதனால், மான் துடிதுடித்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மான் பலியானது. அதைத்தொடர்ந்து, இறந்த மானை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.