×

₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார்

திருவள்ளூர், செப். 30: மப்பேடு காலனி, அழிஞ்சிவாக்கம் பகுதியில் தரம்உயர்த்தப்ப்டட மாதிரி அங்கன்வாடி மையங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு காலனி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களை தனியார்  நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி ₹12.58 இலட்சம் மூலமாக புனரமைத்து மாதிரி அங்கன்வாடி மையங்களாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர் தலைமை வகித்தார். தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஷேர் மோனன், முத்துசாமி, மப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்மார்ட் டிவி, வெளிப்புற விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மாதிரி அங்கன்வாடி மையங்களாக புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பிறகு மாவட்ட கலெக்டர் ஊட்டச்சத்து தோட்டத்தில் மர கன்றுகள் நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து, இவ்வங்கன்வாடி மைய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தரம் உயர்த்தப்பட்ட  மாதிரி அங்கன்வாடி மையங்களின் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி கற்று தர ஸ்மார்ட் டிவி, வெளிபுற விளையாட்டு மைதானத்தில விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மையத்திற்கு தேவையான சமையல் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மையத்திற்கு சுற்று சுவற்றில் ஐஇசி தகவல்கள் வரையப்பட்டுள்ளது, ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மப்பேடு காலனி மையத்தில் 1 - 6 வயதுள்ள 133 குழந்தைகளும்,  2 - 5 வயதுள்ள 35 குழந்தைகளும் முன்பருவ கல்வி பயனடைந்து வருகின்றனர். மேலும், 7 கர்ப்பிணிகளும், 12 பாலூட்டும் தாய்மார்களும் பயனடைந்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்மார்ட் டிவி, வெளிப்புற விளையாட்டு  உபகரணங்களுடன் கூடிய மாதிரி அங்கன்வாடி மையங்களாக புனரமைத்து தரம்  உயர்த்தப்பட்ட அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றி  வைத்தும் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

Tags : Anganwadis ,
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...