
கூடுவாஞ்சேரி, செப். 30: கிளாம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில், 227 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரேகாகார்த்தி, துணை தலைமையாசிரியர் மதுரைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு 227 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினர். இதில் வார்டு கவுன்சிலர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், திமுக நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.