×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது: எஸ்பி சுதாகர் தகவல்

காஞ்சிபுரம், செப். 28: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என போலீஸ் எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் வீடு, வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தண்ணீர் பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை, ரோந்து, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலையம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்குட்பட்ட பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்றும், பெட்ரோல் பங்க்கிற்கு பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளிடம் காவல்துறையின் மறு அறிவிப்பு வெளிவரும் வரை கேன்களில் பெட்ரோல் வாங்குவதை தவிர்த்து காவல்துறைக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags : Kanchipuram District ,SP ,
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...