பொன்னேரி, செப்.27: பொன்னேரியில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு புதிய குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் தீயணைப்பு துறையின் அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தீயணைப்பு துறையின் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நூற்றெட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நில இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக நான்கு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நேற்று சின்னக்காவனம் கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் ஆலோசனை மற்றும் கூட்டம் தீயணைப்பு துறை,வருவாய்த்துறை, கிராம பொதுமக்கள் என மூன்று தரப்பு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.