×

தா.பேட்டை அருகே துணிகரம் வீட்டு பீரோவை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை

தா.பேட்டை, செப்.27: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் காவல் சரகம் கண்ணனூர்பாளையம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் அதே பகுதியில் உள்ள அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (29). இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் சத்யா தோட்டத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் இவரது உறவினர் 70 வயது மூதாட்டி மட்டும் இருந்துள்ளார். அப்போது அந்தப்பகுதியில் சாமி குறி சொல்வது போல் வந்த அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 22 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மறுபடியும் பீரோவை பூட்டிவிட்டு சாவியுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

மதியம் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்த சத்யா துணிகள் சிதறி கிடப்பதை பார்த்து பீரோ சாவியை தேடி உள்ளார். ஆனால் சாவி கிடைக்கவில்லை. இது குறித்து தனது கணவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பீரோவை உடைத்து திறந்து பார்த்த சத்யா அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. ஆனால் பீரோவில் சேலைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் மட்டும் தப்பியது. பணம் சேலைக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததால் தப்பியது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து பட்டபகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து 22 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். சேலைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரூ.2 லட்சம் பணம் தப்பியது

Tags : Vadhakaram ,Tha. Pettai ,
× RELATED மரத்தில் பைக் மோதி லாரி டிரைவர் பலி