×

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மயிலாடுதுறை, செப்.27: டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்தார். இதுகுறித்து மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சாமி.நடராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி ஆற்றில் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. எனவே, நெல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் கோரிக்கை வைக்கும் பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மேலும், விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வசூலிக்கும் முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்யும் மொபைல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு துவக்க வேண்டும். தற்போது, மழை பெய்து வருவதால் 17 சதவீத ஈரப்பதற்கும் அதிகமான 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு மிகக் குறைந்த தொகையே வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய இடப்பீட்டை வழங்க வேண்டும். டெல்டா பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட மக்களின் நீராதாரமான பரம்பிக்குளம் ஆழியாறு அணையின் மதகு உடைப்பு ஏற்பட்டு, வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. தமிழக அரசு இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் உறுதித்தன்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதுடன், மாநிலத்தில் உள்ள பிற அணைகளின் உறுதித் தன்மையையும் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delta districts ,
× RELATED தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும்...