×

மீனாட்சி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் பயிர்களின் சாகுபடியில் நுண்ணூட்டச் சத்துகளின் பயன்பாடு

பட்டுக்கோட்டை, செப்.27: பயிர்களின் சாகுபடியில் நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்பாடு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி விளக்கமளித்துள்ளார். பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு தேவைப்படும் சத்துக்களை முதன்மை சத்துக்கள், பேரூட்டச்சத்துக்கள், இரண்டாம் நிலை சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் என வகைப்படுத்தலாம். இரும்பு, மாங்கனிசு துத்தநாகம், தாமிரம் போரான் மற்றும் மாலிப்டினம் போன்றவை பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்படும். நுண்ணூட்டச் சத்துக்கள் பயிரின் வளர்ச்சி காலத்தில் கிடைக்கவில்லை என்றால் வழக்கமாக இடும் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட்டாலும் உரிய மகசூல் கிடைக்காது. பயிர்களுக்கு சரியான விகிதத்தில் அனைத்து சத்துக்களும் அளித்தால் தான் பயிர்கள் சீராகவும், செழிப்பாகவும் வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கும்.

ஒவ்வொரு நுண்ணூட்டசத்திற்கும் பயிரின் வளர்ச்சியில் தனித்தனி பங்குகள் உண்டு. எனவே பயிர் சாகுபடியில் நுண்ணூட்டங்களின் பங்கினையும் அந்த சத்து பயிருக்கு கிடைக்காத நிலையில் பயிரில் தோன்றும் குறைபாட்டு அறிகுறிகளையும் கண்டறிந்து நுண்ணூட்டச் சத்து பயிருக்கு இடும்போது மகசூல் அதிகரிக்கும். செடி வளர்வதற்கு துத்தநாக சத்து அவசியமானது. உலோக ஊக்கியாக துத்தநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. செடிக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து செல்லில் உள்ள சவ்வுகள் சரியாக பணி செய்ய உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நெல் வயலில் தோன்றும் முக்கிய அறிகுறிகளாவன. துத்தநாக பற்றாக்குறை நாற்று நட்ட இரண்டு முதல் நான்கு வாரங்களில் தோன்றும். பயிரின் இளந்தளிர் நடு நரம்பின் அடிப்புறம் வெளுத்து காணப்படும். இலைகளின் அளவு சிறுத்து விடும். முதிர்ந்த இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

இப்புள்ளிகள் பெரிதாகி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விடுவதால் இலை முழுவதும் பழுப்பாக தோன்றும். தூர்கட்டுதலும் பயிரின் வளர்ச்சியும் மிகவும் பாதிக்கப்பட்டு பயிர்கள் காய்ந்து விடும். துத்தநாக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நெல் நடவிற்கு முன் துத்தநாக சல்பேட்டை ஏக்கருக்கு 10 கிலோ உவர் மற்றும் களர் மண்ணிற்கு ஏக்கருக்கு 15 கிலோவினை 20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இட வேண்டும் அல்லது அரை கிலோ துத்தநாக சல்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து நடவு நட்ட பின் 30 40 மற்றும் 50 நாட்களில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இது போன்ற துத்தநாக சத்து பற்றாக்குறையை நெல் வயலில் காணும் விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நெற்பயிரை காத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Meenakshi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...