×

அருப்புக்கோட்டையில் மூதாட்டி கழுத்தை நெரித்து மர்மநபர் கொள்ளை முயற்சி: தொடரும் சம்பவங்களால் மக்கள் பீதி

அருப்புக்கோட்டை, செப். 24: அருப்புக்கோட்டையில் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தொடரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியில் உள்ள வடக்கு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செண்பகரத்தினம் (68). கணவனை இழந்த இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, செண்பகரத்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் ஓட்டை பிரித்து வீட்டில் இறங்கிய மர்மநபர், பீரோவில் தங்கநகை மற்றும் பணத்தை தேடியுள்ளார்.

எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மர்மநபர், தூங்கி கொண்டிருந்த செண்பகரத்தினத்தின் கழுத்தை நெரித்து பணம் மற்றும் நகை எங்கே உள்ளது என கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த செண்பகரத்தினம் கூச்சலிட்டார். அவரது குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை பகுதியில் தொடரும் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பலாத்கார சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aruppukkottai ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;...