திருப்பூர்,செப்.24: ஊத்துக்குளி அருகே குடோனில் சாராயம் பதுக்கி வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி முத்தம்பாளையம் ஊராட்சி, மூன்று காவலை தோட்டம் பகுதியில் குடோனில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பெரிய பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் இருந்தது. அருகிலேயே சிறிய அளவிலான கிருமி நாசினி பாட்டில் இருந்தன. போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து 7 பேரும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் திருப்பூர் கருமாராம்பாளையம் பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்த குணசேகரன் (29), சென்னை திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த விஜய் (25), தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), சென்னை அம்பத்தூர் அய்யம்பாக்கததை சேர்ந்தவர்கள் சதீஷ் (28), சுலைமான் (26), சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஜெயராஜ் (28), சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (32) ஆகியோர் என தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் கிருமி நாசினி என்ற பெயரில் பிளாஸ்டிக் பாட்டிலில் சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் பிளாஸ்டிக் கேன்களில் வைக்கப்பட்டிருந்த 1,750 லிட்டர் சாராயம், சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.