×

பூர்வீக பாசனத்தை உறுதிப்படுத்த வைகை வடிநில கோட்டம் தனியாக உருவாக்க வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மானாமதுரை, செப்.23:மானாமதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் மதுரைவீரன் தலைமை தாங்கினார். விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அர்ச்சுணன், இராம.முருகன், மலைச்சாமி, சேதுபதி, உறங்காபுலி, ராஜாங்கம், இளங்கோ, மனோகரன், முருகன், மச்சேஸ்வரன் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வைகையில் பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பூர்வீக ஆயக்கட்டில் கிருதுமால் நதியை சேர்க்க அரசாணை வெளியிட வேண்டும். 258 கி.மீ தூரம் பயணிக்கும் வைகை வடிநிலப்பகுதிக்கு தனியாக வைகை வடிநிலக்கோட்டம் உருவாக்கி தனி அதிகாரிகளால் பூர்வீக வைகைப் பாசனத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும். 1959ம் ஆண்டு வைகை அணை கட்டி முடிந்த பிறகு 1962ல் எடுக்கப்பட்ட வைகை வடிநில பரப்பான 419 கண்மாய்களையும் பொதுப்பணித்துறை கணக்கில் கொண்டுவர வேண்டும்.

இன்றைய நிலவரப்படி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 46 கண்மாய்கள் வைகை பாசனத்திலிருந்து கடந்த 1995ல் நீக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகம் மதுரை கோட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி விடுபட்ட 46 கண்மாய்களை ஒன்றுபட்ட பூர்வீகப் வைகை பாசனத்தில் இணைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகைத் தண்ணீர் கொண்டு செல்லமுடியாத 70க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை மதுரை கோட்ட முதன்மை பொறியாளரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட நிர்வாகி அர்ச்சுணன் தெரிவித்தார்.

Tags : Vaigai ,
× RELATED சித்திரை திருவிழாவின் முக்கிய...