தர்மபுரி, செப்.23: தர்மபுரி அரசு ஐடிஐ முதல்வர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி அரசினர் ஐடிஐயில் நடப்பாண்டு சேர்க்கைக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில், தொழிற்பிரிவுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, நேரடி சேர்க்கை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. இந்த நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. 14 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14. உச்சவயது வரம்பு இல்லை. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம்.
தகுதியுள்ள இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் மற்றும் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப் பெறாதவர்கள், இதனை ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன், நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.