ராமேஸ்வரம், செப்.22: ராமேஸ்வரம் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், அங்குள்ள அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் வந்தார். தங்கச்சிமடம் ஊராட்சி பகுதியில் உள்ள மெய்யம்புளி அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் மூலம் நடைபெற்று வரும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் பணியை ஆய்வு செய்தார். இரவில் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கினார். நேற்று அதிகாலை தனுஷ்கோடி பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அதன்பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ராமேஸ்வரம் நகரில் உள்ள பழமையான அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்றார்.