திருச்சி, செப். 20: திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப் கடந்த 31.12.2021 தொடங்கப்பட்டது. மாவட்,ட மாநில, தேசிய, மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் இந்த ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர். ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றும் உள்ளது.
இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 13வது தென் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகளை நேற்று திருச்சி ரைபிள்கிளப் தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் மாநகர துணை ஆணையர் தேவி, திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர் செல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் இளமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தென் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாநில அளவில் வெற்றி பெற்ற சுமார் 800 நபர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24ம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.