நெல்லை, செப். 20: தேசிய மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு வாரத்தையொட்டி நெல்லையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தேசிய மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17ம்தேதி முதல் 23ம் வரை தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன்படி ஒரு பகுதியாக பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் ஆயுஷ் மருந்துகளின் எதிர் விளைவு கண்காணிப்பு துறை சார்பில் தேசிய மருந்துகளின் எதிர்விளைவு கண்காணிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பிருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தமரியா, துணை முதல்வர் டாக்டர் சவுந்தரராஜன், உறைவிட மருத்துவர் மருத்துவர் ராமசாமி, மருத்துவர்கள் சுல்பின் நிகார், கோமளவள்ளி, ராஜகுமாரி, ராம், கிங்ஸ்லி, இசக்கி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேரணியின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். பேரணியில் சித்த மருத்துவர்கள், பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு மருந்து உட்கொள்ளும் முறை, தவறாக மருந்து உட்கொள்ளும்போது ஏற்படும் எதிர் விளைவுகள் மற்றும் அதனை மருத்துவப் பணியாளர்களிடம் பதிவு செய்தல் போன்றவை பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.
ஏற்பாடுகளை பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் ஆயுஷ் மருந்துகளின் எதிர் விளைவு கண்காணிப்பு துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அப்துல் காதர் ஜெயிலானி மற்றும் திட்ட உதவியாளர் டாக்டர் கவிதா செய்திருந்தனர்.