ஊட்டி, செப். 20: புருக்கோலி விலை மேலும் உயர்ந்து தற்போது கிலோ ஒன்று ரூ.310க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை தோட்டங்களை வைத்துள்ளனர். சிலர் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில பகுதிகளில் உள்ள விவசாயிகள் சைனீஷ் வகை காய்கறி பயிரிட்டு வருகின்றனர். மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிைடக்காத போதிலும், சைனீஷ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் சற்று விலை அதிகமாக கிடைத்து வருவதால், இதனை ஆர்வமுடன் செய்கின்றனர்.
எப்பநாடு, அணிக்கொைர, சின்னக்குன்னர், தும்மனட்டி, மோரிக்கல், கல்லட்டி, கெந்தோரை, கடநாடு மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளான சுக்கினி, செல்லாரி, புருக்கோலி, சைனீஷ் கேபேஜ் உட்பட பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சைனீஷ் வகை காய்கறிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இதனால், எப்போதும் சீரான விலை இந்த காய்கறிகளுக்கு கிடைத்து வரும் நிலையில், தற்போது விவசாயிகள் இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக புருக்கோலி விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரம் கிலே ஒன்று ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை மேலும் உயர்ந்துள்ளது. தற்போது ஊட்டி மார்க்கெட்டில் கிலோ ஒன்று ரூ.310 வரை விலை கிடைக்கிறது. இதனால், புருக்கோலி பயிரிட்ட விவசாயிகள் காட்டில் பண மழை கொட்டி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘சைனீஸ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் சீரான விலை கிடைத்து வருகிறது. இதனால், நாங்கள் பல்வேறு வகையான சைனீஸ் வகை காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். தற்போது புருக்கோலி அதிக விலைக்கு விற்பனையாகிறது. வியாபாரிகள் எங்களிலும் கிலோ ஒன்று ரூ.250 முதல் 310 வரை வாங்குகின்றனர்.
இதனால், எங்களுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது, என்றனர். வியாபாரிகள் கூறுகையில், ‘பொதுவாக சைனீஸ் வகை காய்கறிகள் அதிகளவு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. இதனால், எப்போதும் இவ்வகை காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. தற்போது புருக்கோலி கிலோ ஒன்று ரூ.300 வரை விற்பனையாகிறது. இதனை விவசாயிகளிடம் இருந்து வாங்கி நாங்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வருகிறோம், என்றனர்.