×

கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதியில் மரிக்கொழுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை: கரூர்மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மரிகொழுந்து சாகுபடியை விவசாயிகள் கணிசமாக செய்து வருகின்றனர். மரிக்கொழுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் வழங்கி உள்ளனர். இதில் தவனம் என்று அழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரம் ஆகும். இந்த செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய்களுக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகள் மற்றும் மலர்செண்டுகளில் இதனுடைய நறுமணத்திற்காக மரிக்கொழுந்து இலைகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப்பொருட்களுக்கு நறுமணம் ஊட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை, பானங்களுக்கு நறுமணம் ஏற்படுத்துவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் காஷ்தீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுமார்1500 ஏக்கர்பரப்பளவில் மரிக்கொழுந்து பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்கின்றனர். தற்போது கரூர்மாவட்டத்தில் கடவூர்மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் கணிசமாக மரிக்கொழுந்து பயிரிடப்பட்டு வருகின்றனர். மரிக்கொழுந்து ஓரு வருடம் வாழும் வகையை சார்ந்த பயிர்ஆகும். 45 முதல் 80 செமீ வரை உயரத்துடன் நேராக வளரக்கூடிய இந்த பயிர்கள், சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. பூங்கொத்தானது காப்பிட்டுலம் வகையைச் சார்ந்தது ஆகும். இரண்டு பாலினப் பூக்கள் நடுப்பாகத்திலும், பெண் பூக்கள் ஊரத்திலும் அமைந்து காணப்படும். இந்த பயிர்கள் நெட்டை மற்றும் குட்டை என இரண்டு வகைகள் உள்ளது.

இதில் நெட்டை வகையானது சற்று உயரமாக (80 செமீ வரை) வளரும் தன்மை, பிளவுபட்ட இலைகள்களையும், காலம் தாழ்ந்து பூக்கும் தன்மையும் கொண்டது. குட்டை வகையில் அனைத்து இலைகளும் செடிகளின் அடிப்பாகத்திலும், மேல்பாகத்திலும் பிளவுபட்டு தோன்றுவதோடு குறுகிய காலத்தில் பூக்கும் தன்மை கொண்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட பி.கே.எம் 1 மரிக்கொழுந்து என்னும் ரகம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வகையான ரகம் உள்ளுர்ரகத்தில் (சின்னமனூர்) இருந்து தேர்வு செய்து உள்ளனர். இதன் செடிகள் நேராகவும் அடர்த்தியாகவும், அதிக கிளைகளையும் கொண்டது. இந்த இலைகள் வௌ்ளை கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். ஒரு செடியின் எடையானது சுமார்38.65 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு எக்டரில் இருந்து 16.78 டன் பச்சை தழை விளைச்சலாக கிடைக்கிறது. இதன் மூலம் 20.32 கிலோ வாசைன எண்ணெய் கிடைக்கும். இந்த ரகமானது சுமார்145 முதல் 150 நாட்கள் வயது கொண்டது ஆகும். தமிழகத்தில் வெப்ப மண்டல சமவெளிப் பகுதிகளுக்கு மிகவும் உகந்த ரகமாக உள்ளது. இந்த பயிர்வளம் செறிந்த செம்மண் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்றாக வளரக்கூடது ஆகும். மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி போன்ற இயற்கை சூழல்கள் நல்ல விளைச்சலை ஏற்படுத்தும்.

பூக்கும் பருவத்தில் அதிக அளவு மழை மற்றும் வெப்பம் இருந்தால் கிடைக்ககூடிய எண்ணெய்யின் அளவு குறையும். மாலைகளுக்கு பயன்படுத்துவதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைக்கப்பட்ட நாட்களில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யப்படுவதால் எந்த பருவத்திலும் சாகுபடியை செய்யலாம். ஆனால் வாசைன எண்ணெய்க்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து பயிர்கள் நவம்பர், மாதம் முதல் பிப்ரவரி, மார்ச்ச வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் - மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மரிக்கொழுந்து செடிகள் விதை மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டரில் விதைப்பதற்கு 1.50 கிலோ வரை விதைகள் தேவைபடுகிறது. முந்தைய பருவத்து பயிரில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு மேலான பழைய விதைகள் முளைப்பு தன்மையை இழந்து விடுகிறது. நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர்நீளமும், 1 மீட்டர்அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும்.. நடவு வயலை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது 2 க்கு 2 மீட்டர்அளவில் பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து நாற்றுகளை பிடுங்கி 15 க்கு 7.5 செமீ என்ற அளவில் இடைவெளி விட்டு நடுதல் வேண்டும்.

இதுபோன்ற சமங்களில் நாற்றுகள் சுமார்10 முதல் 12 செமீ அளவு உயரத்தில் காணப்படும்.மரிக்கொழுந்து பயிருக்கு எக்டருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழை சத்து, 125 கிலோ மணிசத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து உரங்களை பயன்படுத்த வேண்டும். முழு அளவு நன்றாக மக்கிய தொழு உரம், மணிசத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25 வது நாளில் முதல் மேல் உரமாக இட வேண்டும். பொதுவாக இந்த செடிகளை பூச்சி நோய்கள் தாக்குவது இல்லை. ஆனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர்நீரில் 2 மில்லி டைமீத்தோயேட் பூச்சி கொல்லியினை கலந்து மாலை வேளையில் தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விதைக்கப்பட்ட 5 முதல் 6 மாதங்கள் வரை இந்த பயிரை அறுவடை செய்யலாம்.

விதைக்கப்பட்ட 45 வது நாளில் முதல் அறுவடையும், அதனை தொடர்ந்து 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடையை செய்யலாம். பிப்ரவரி கடைசி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை தரையில் இருந்து சுமார்10 செமீ உயரம் விட்டு தழை வெட்ட வேண்டும். ஒரு எக்டரில் இருந்து 17 பசுந்தழையும், இதில் இருந்து 12.50 கிலோ வாசனை எண்ணையுடங கிடைக்கிறது என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே மரிக்கொழுந்து பயிர்சாகுபடிகள் செய்யும் விவசாயிகள் மேற்படி ஆலோசனைகள் மூலம் சாகுபடி செய்தால் அதிகமான மகசூல் பெற்று லாபம் பெறலாம் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags : Marikolundu ,Kadavur ,Thokaimalai ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...