×

வடவள்ளி அருகே துணிகரம்: அடுத்தடுத்து பூட்டிய 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

தொண்டாமுத்தூர், செப்.20:  வடவள்ளி அருகே அடுத்தடுத்து பூட்டிய 2  வீடுகளில் மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே சுண்டப்பாளையம் எஸ்எம் நகரை சேர்ந்தவர் சதாசிவம் (62). கோவை ரயில்வேத்துறையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சதாசிவம் உடல்நலக்குறைவு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து நேற்று சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மீண்டும் சதாசிவம், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த கம்மல், ஜிமிக்கி, மோதிரம் என மொத்தம் 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதேபோல அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி 65) என்பவர், தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இச்சமயத்தில் வீட்டில் பின்புறம் வழியாக நுழைந்து ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்தும், புகார்களின்பேரில் வடவள்ளி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vadhakaram ,Vadavalli ,
× RELATED கைத்தட்டலுக்கு குரங்குதான்...