ஈரோடு, செப். 20: ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையத்தினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார்.
ஈரோடு மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக காய்கறி மற்றும் பழ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி குடிநீர் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், 36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், தி.மு.க. பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விற்பனை நிலையத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் உள்ளதாகவும், ரூ.1 செலுத்தினால் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், ரூ.100 செலுத்தி ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டால், ரூ.7க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.