பொள்ளாச்சி, செப். 13: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து குறைவால், ஒருகிலோ ரூ.130விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் திண்டுக்கல், ஒட்ட-ன்சத்திரம், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் எலுமிச்சையை, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனை உள்ளூர் பகுதி வியாபாரிகள் மட்டுமின்றி, கேராள மாநில வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர்.
இதில் கடந்த ஜூன் மாதம் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை விளைச்சல் அதிகமாக இருந்ததுடன், அவை பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிகளவு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், மழைக்காலம் என்பதால் அந்நேரத்தில் விற்பனை மிகவும் குறைந்து ஒருகிலோ ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.60க்கே விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, எலுமிச்சை விளைச்சல் குறைந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் அவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ எலுமிச்சை ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.130வரை என தரத்திற்கேற்ப விலைபோகிறது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.