ஜெயங்கொண்டம், செப்.10: கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் ஆலய கிரிவல பெருவிழா நேற்று நடைபெற்றது. கிரிவல பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணிக்கு அருள்மிகு கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4.30 மணிக்கு பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் துவங்கி நடைபெற்றது. கிரிவலம் கோயிலில் துவங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோயில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோயிலை வந்தடைந்தது. கோயிலில் 7 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. கிரிவல பெருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.