தூத்துக்குடி,செப்.3: திமுக அரசின் சாதனைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், இம்மானுவேல், டேவிட்ராஜ், கருப்பசாமி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதாஜீவன் சிறப்புவிருந்தினராக பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் ஒன்றிய செயலாளர்களுடன் இணைந்து கிராமங்கள்தோறும் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். நம்மோடு இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்களை அரவணைத்து செல்லவேண்டும். திமுகவின் வரலாறு தெரியாமல் பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும். தமிழக முதல்வரையும் நம் இயக்கத்தையும் மரியாதை குறைவாக பேசுபவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
திமுக அரசின் சாதனைகளை எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். இளைஞர் அணியில் இருந்து வருபவர்கள் திமுக முதலமைச்சர் போன்று சுறுசுறுப்புடன் கடமை உணர்வோடு பணியாற்றவேண்டும். சிறப்பாக பணியாற்றும் இளைஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றார். கூட்டத்தில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், துணை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னப்பாண்டியன், மும்மூர்த்தி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முத்துராமன், அருண்சுந்தர், சங்கரநாராயணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி சூர்யா, துணை அமைப்பாளர்கள் அல்பட், பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.