நத்தம், செப். 3: நத்தம் பேரூராட்சி கூட்டத்தில் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் பொது நூலகம் அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்ஷா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மகேஸ்வரி சரவணன், செயல் அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பிரசாந்த் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் காமராஜ் நகரில் உள்ள கழிப்பறை மற்றும் பால்வாடி மையத்தின் பின்புறம் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சீரமைப்பது. நத்தம் காந்திஜி பூங்கா வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் பொதுநூலகம் அமைக்க இடம் தேர்வு செய்து அதற்கான முன்மொழிவினை அரசுக்கு அனுப்புவது என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி, கவுன்சிலர்கள் இஸ்மாயில், சகுபர் சாதிக், வசந்த சுஜாதா, ராதிகா, சிவா, மாரிமுத்து, ராமு, விஜயவீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.