கோவில்பட்டி, செப். 2: கோவில்பட்டி அருகே உள்ள குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து வெயிலுகந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த பரந்தாமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கைகளில் கரிசல் மண்ணை ஏந்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். அதன்பிறகு அவர்கள், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வெயிலுகந்தபுரத்தில் இருந்து சங்கரலிங்கபுரம் செல்லும் வண்டிப்பாதையில் தற்போது புதிதாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இப்பணிக்கு கரிசல் மண் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சாலையின் இருபுறமும் 5 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. நீர்வழிப்பாதைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே செம்மண் மற்றும் சரள் மண் கொண்டு தரமான சாலை அமைப்பதோடு, விவசாய நிலங்களுக்கு தங்குதடையின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.