கமுதி, செப்.2: அபிராமம் சந்தைபேட்டை அருகே பழைமை வாய்ந்த நவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு பேரூராட்சி தலைவர் பாத்திமா கனி தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளர் ஜாகீர் உசேன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி துணைத் தலைவர் மாரி மற்றும் கோவில் நிர்வாகி நாகராஜன்ஆகியோர் செய்திருந்தனர். இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தோடு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் இக்கோவிலின் திருப்பணிக்கு பல வருடங்களுக்கு முன்பே முஸ்லிம் மதத்தினர் ஏராளமானோர் நன்கொடை வழங்கியுள்ளனர். மேள தாளம், வானவேடிக்கை, கரகாட்டத்துடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்கு முன் ஏராளமான பெண்கள் முளைப்பாரி தலையில் சுமந்து சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் முடிவில் கோவிலை வந்தடைந்தது.