சேலம், ஆக. 27: சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் பதிவு செய்யலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியிருப்பதாவது: சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை, அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் மண்டல அளவிலான விற்பனை கண்காட்சி (மதி சாராஸ் மேளா) நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த விவரங்கள் மற்றும் பொருட்களின் மாதிரியுடன், வரும் 1ம் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவற்றில் தரமுள்ள பொருட்களை தயார் செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, மண்டல அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநரை தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.