×

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது செப்.5ல் கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி அருளல்

நெல்லை, ஆக.27: நெல்லை  டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.5ம் தேதி மானூர் அம்பலவாணசுவாமி கோயிலில் கருர்  சித்தருக்கு சுவாமி காட்சி அருளும் வைபவம் நடக்கிறது. கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். அவர் கலைகள் முழுவதும் கற்றுத் தேர்ந்தவர். தம்மை அறிந்த தலைவனை தன்னுள் கண்ட பெருமை உடையவர். அவர் பல்வேறு சிவ தலங்களுக்கு சென்று விட்டு ஈசனை தரிசித்து வரங்கள் பெற்று நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சுவாமியை தரிசிக்க வந்தார். தான் அழைத்தவுடன் தனக்கு இறைவன் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தினை பெற்றிருந்தார் கருவூர் சித்தர். நெல்லையப்பர் கோயில் வாசல் முன் நின்று சுவாமி நெல்லையப்பரை ‘‘ நெல்லையப்பா’’ என 3 முறை அவர் அழைத்தார். ஆனால் கருவூர் சித்தரின் கூப்பிட்ட குரலுக்கு நெல்லையப்பர் செவிசாய்க்கவில்லை. இதனால் கோபமுற்ற சித்தர், இங்கு இறைவன் இல்லை என்றும் எருக்கு எழ எனவும் சாபமிட்டு வடக்கு நோக்கி பயணித்தார். அப்போது மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார்.அவரோ தாமதமாக வந்தாலும் தானாக வந்து தரிசனம் தருவான் நெல்லையப்பன் என்று கூறி சித்தரை ஆற்றுதல் படுத்தினார். இதேபோல் நெல்லையப்பர் மானூரில் கருவூர் சித்தருக்கு காட்சியளித்தார்.

இதனையே ஆவணி மூலத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு ஆவணி மூலத்திருவிழா நேற்று காலை சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் உள்ள விநாயகர் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதைதொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா வருகிற செப். 5ம்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள்  நடக்கிறது. 29ம்தேதி 4ம் திருவிழாவன்று இரவு 8 மணி அளவில் சுவாமி,   அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும்,  சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும், பஞ்ச  மூர்த்திகள் ரதவீதி உலா நடக்கிறது. செப்.3ம்தேதி இரவு 7 மணிக்கு   கரூர் சித்தர், மானூருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து   ரதவீதிகள் வழியாக சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாணசுவாமி கோயிலை  சென்றடைகிறார்.  10ம் திருநாளான செப்.4ம்தேதி இரவு 1  மணிக்கு நெல்லையப்பர்  கோயிலில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள்,  பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர்,  தாமிரபரணி தேவி, அகத்தியர், குங்கிலிய நாயனார்  ஆகியோர் பல்லக்கு,  சப்பரத்தில் மானூர் அம்பலவாணர் சுவாமி  கோயிலுக்கு எழுந்தருளும் வைபவமும்,  செப்.5ம்தேதி  அதிகாலை 5 மணிக்கு மானூர் அம்பலவாணர்  கோயிலை சென்றடைகின்றனர். அங்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கரூர்  சித்தருக்கு சுவாமி காட்சி அளித்து  சாப விமோசனம் நிவர்த்தி செய்யும்  நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

Tags : Avani Moola festival ,Nellayapar Temple ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி...