ஊட்டி,ஆக.26: நீலகிரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான பாராளுமன்ற குழு கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் தலைவர் கிரித் பிேரம்ஜிபால் சோலங்கி தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. இதில் உறுப்பினரான நீலகிரி தொகுதி எம்பி., ராசா உட்பட 23 எம்பி.,க்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மேம்பாடு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆய்வு கூட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, தேசிய சுகாதார குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஸ், கூடுதல் டிஜிபி., வெண்மதி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணை செயலாளர் சந்திரசேகர் சகாமுரி, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட கலெக்டர் அம்ரித்மற்றும் மாவட்ட எஸ்பி., ஆசிஷ் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கல்வி உதவித்தொகை, வன்கொடுமை வழக்குகள் மற்றும் தீர்வு மற்றும் உதவிகள் குறித்தும் அனைத்து துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகள் தங்கள் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பாராளுமன்ற குழுவினரிடம் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாண்மை நிர்வாகத்துடன் எஸ்சி.,எஸ்டி., ஊழியர்கள் நலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.