நத்தம்: நத்தம் அருகே லிங்க வாடி கிராமத்தில் கடந்த 6 ந் தேதி டி.வி மெக்கானிக் தங்கராஜாவை அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வெட்டிக் கொலை செய்து அவரது தலையை சிதைத்து கொண்டிருந்ததை பார்த்த அந்த கிராம மக்கள் உதயகுமாரை கற்களால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் உதயகுமாரை தாக்கியதாக கூறப்படும் 7 பேரை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் எஸ்.ஐ. சரவணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதுரை சாலையில் லிங்கவாடி பிரிவு அருகே வெளியூர் செல்ல நின்று கொண்டிருந்த லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(39), அருண்குமார்(25), சோலை (21) , பொன் நாட்டாமை என்ற சிவம் (26) , வெள்ளிமலை (39), பாலகுமார்(32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.