×

ரூ.178 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் நடக்கும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இடமாற்றம் இல்லை

கோவை, அக்.24: கோவை வெள்ளலூரில் ரூ.178 கோடி மதிப்பில் ஒருங்கிணந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படவில்லை என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.கோவை மாநகரில் காந்திபுரத்தில் டவுன் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என முக்கியமான பேருந்து நிலையங்கள் உள்ளன. கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, சிவகாசி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன.

வளர்ந்து வரும் கோவை நகரை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சியால் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை புறநகர் பகுதியான வெள்ளலூரில் ரூ.172 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெள்ளலூரில் 50 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பின் திட்ட ஆலோசகர்கள் மூலம் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.202.80 கோடி மதிப்பில் இறுதி திட்ட அறிக்கை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்டது.

ஆனால் நிதி பற்றாக்குறை, திட்ட அறிக்கையில் மாற்றம் என பல்வேறு காரணங்களால் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணிகள் சில ஆண்டுகளாக துவக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் வெள்ளலூரில் 178 கோடி ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து வெள்ளலூரில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணியானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.

இந்த பேருந்து நிலையம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டது. பேருந்து நிலையத்திற்கான நுழைவு வாயில் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமைக்கவும், அதேபோல் இந்த பேருந்து நிலைய வளாகத்திலேயே உக்கடத்தில் செயல்பட்டு வரும் லாரி பேட்டையும் இங்கு இடமாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. லாரிகள் வந்து செல்ல நுழைவு வாயில் கொச்சின் பைபாஸ் சாலையில் அமைக்கப்படும். லாரி பேட்டை இடமாற்றம் செய்யப்படுவதால் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி செய்யப்பட உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், உணவு விடுதி, விளம்பர பலகைகள் போன்றவை அமைக்கப்படும். அதில் இருந்து வரும் வருவாய் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்காக செலவிடப்படும். இந்த பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகள், மப்சல் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ‘‘வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படவில்லை. வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இடமாற்றம் போன்று எந்த முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’’ என்றார்.

Tags : Vellalur Integrated Bus Stand ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...