×

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி: ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்

ஜெயங்கொண்டம், ஆக.23: ஜெயங்கொண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு புதிய மின்மாற்றி அமைத்து இயந்திரம் துவக்க நிகழ்ச்சியின்போது அருகில் கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு மின்சாரம் தாக்கி பலியானதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை சேகரித்து புதுக்குடி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக புதிய மின்மாற்றி அமைத்து தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று தற்காலிகமாக இயந்திரங்களை இயக்கி பார்த்தனர். அப்போது அவ்வழியாக வந்த பசுமாடு மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானது. இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர் குணசேகரன் மற்றும் அப்பகுதி மக்கள் மின் வயரை அலட்சியமாக போட்ட அதிகாரிகளை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தேவையில்லை என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Pasumadu ,Jeyangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது