மன்னார்குடி, ஆக.11: கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு இளங்கலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நேற்று காலை துவங்கியது. விண்ணப்பித்த 372 மாணவிகளில் 230 பேர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கலந்தாய்வின் முதல் நாளான நேற்று சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பிஏ தமிழ் இலக்கியத்திற்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் பேராசிரியர் மாறன் தலைமையில் நடந்தது.
இதில் 22 மாணவிகள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கும், பகல் 12 மணிக்கு பி.காம் வணிகவியல் பிரிவுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பி.எஸ்.சி கணினியல் பிரிவுக்கும், பகல் 12 மணிக்கு பிஎஸ்சி கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் குறித்த நேரத்திற்கு சரியாக கல்லூரிக்கு வர வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவிகள் சேர்க்கை கட்டண மாக ரூ.3,200 செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் பேராசிரியர் மாறன் தெரிவித்துள்ளார்.