×

கொடநாடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துைற கூடுதல் இயக்குநர் ஆய்வு

ஊட்டி, ஆக. 9: சிறந்த ஊராட்சியாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கொடநாடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிறந்த தூய்மை கிராமத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் சிறந்த தூய்மை கிராமமாக கொடநாடு ஊராட்சியை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடநாடு ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக கவனம் செலுத்தி முழுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையான ஊராட்சியாக விளங்கி வருகிறது.
 பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறந்த தூய்மை கிராமமாக பரிந்துரைக்கப்பட்ட கொடநாடு கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி நேரில் ஆய்வு செய்தார். முக்கிய பகுதிகள் தூய்மையாக உள்ளதா, குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு இருக்கிறதா மற்றும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி இயக்குனர் (ஊராட்சி) சாம் சாந்தகுமார், ஊராட்சி தலைவர் சுப்பி காரி, ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். சிறந்த தூய்மை கிராமமாக தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கி ஊக்குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Koda Nadu Panchayat ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்