ஈரோடு, ஆக. 9: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வரும் டாக்டர்கள் பணி நேரமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடியும் டாக்டர்கள் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு மணி நேரம் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.