×

அஞ்சிவாக்கம் - குருவாயல் இடையே இருள் சூழ்ந்த புதிய மேம்பாலம்: விபத்து, திருட்டு அதிகம்

பெரியபாளையம்: அழிஞ்சிவாக்கம் முதல் குருவாயல் உள்ளிட்ட பல கிராமங்களை இணைக்கும் வகையில்  கொசஸ்தலம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் தெரு மின் விளக்குகள் எரியாததால், மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும்  பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குருவாயல் அழிஞ்சிவாக்கம் அருகே   கொசத்தலை ஆறு செல்கிறது. இந்நிலையில், அழிஞ்சிவாக்கம், திருக்கண்டலம், பூரிவாக்கம், பெருமுடி வாக்கம், சேத்துப்பாக்கம், பாஷிகாபுரம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கனி மற்றும் பூக்களை செங்குன்றம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கடந்த காலங்களில் இந்த கொசத்தலை ஆற்றினை கடந்து தான் சென்று வந்தனர்.

மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் தரை புரண்டு ஓடும் நிலை ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள மக்கள் சுற்றி செல்லும் நிலை இருந்தது. இதற்கிடையே அஞ்சிவாக்கம் -குருவாயல் இடையே உள்ள கொசுத்தலை ஆற்றின் மீது மேம்பாலம் கட்ட அப்பகுதி மக்கள் விவசாயிகள் நீண்ட நாளாக போராடி வந்த நிலையில் அரசு மேம்பாலம் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.  இதனால், 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செங்குன்றம் திருவள்ளூர் ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இம் மேம்பாலம் பயன்படுத்தி தான் சென்று வருகின்றனர்.

ஆனால் மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கடந்த இரண்டு மாத காலமாக எரிவதில்லை பாலத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் பாலத்தின் மீது இரு புறம் சுமார் 30க்கும் மேற்பட்ட தெருமின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 3 மாதங்களாக, மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருமின் விளக்குகள் எரியவில்லை. இதனால், மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள்  வாகன ஓட்டிகள் கோரிக்க வைத்துள்ளனர்.

Tags : Anjivakkam ,Kuruwayal ,
× RELATED அஞ்சிவாக்கம் - குருவாயல் இடையே இருள்...