சாத்தூர், ஆக 8: சாத்தூர் அருகே, மேட்டமலை கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்டர்நேஷனல் யூனியன் யோகா பெடரேஷன் மற்றும் ஆப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாபெரும் மாநில அளவிலான யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்தனர். ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். கோவில்பட்டி கரா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாம் இடம், சாத்தூர் ராதாகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் மூன்றாம் இடம் பெற்றனர். கல்லூரி முதல்வர் ஜெயராஜேஸ்வரி தலைமை வகித்தார். பேராசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் அருண்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் இசக்கிமுத்து செய்திருந்தார்.