வால்பாறை,ஆக.8:வால்பாறையில் திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வால்பாறை தாலூகா முழுவதும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வால்பாறையில் நகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நகர செயலாளர் சுதாகர் தலைமையில், நகராட்சி துணைத் தலைவர் செந்தில் முன்னிலையிலும் வால்பாறை அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் காந்தி சிலை அருகே நிறைவடைந்து. பின்னர் அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள்,கவுன்சிலர்கள் திரளாக பங்கேற்றனர். வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவ படத்திற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.